Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது!
கொழும்பில் 8ம் இலக்க நீதிமன்றில் இடம்பெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38 பேரினது வழக்குகள் அனைத்தையும் உடனடியாக கோமாகம நீதமன்றிற்கு மாற்ற முயல்வதன் மூலம் கைதிகள் விடுதலையை வேண்டுமென்றே தாமதப்படுத்த முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
கொழும்புச் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட நீதிமன்றம் என்ற ஏற்பாட்டின் பிரகாரம் 8ம் இலக்க நீதிமன்றில் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற 38 கைதிகளின் வழக்குகளையும் உடனடியாக கோமாகம நீதிமன்றிற்கு மாற்ற முயற்சி இடம் பெறுகின்றன. குறித்த கோமாகம பிரதேசத்திற்கு வழககுகள் மாற்றப்படுமானல் அரசியல் கைதிகள் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.
குறிப்பாக தற்போது கொழும்பில் இடம்பெறும் வழக்குகளிற்காக பிரபல சட்டத்தரணிகள் மிகக் குறைந்த தொகையுடன் ஆயராகின்றனர். ஆனால் கோமாகம நீதிமன்றிற்கு செல்வதற்கே ஓரு மணிநேரம் போதாது.
அத்துடன் அங்கு செல்லும் சட்டத்தரணி கொழும்பு வழக்குகளை இழக்க நேரிடும். இதனோடு குறித்த கோமாகம்ப் பகுதி தனித்த சிங்களப் பகுதியாகவே காணப்படுவதனால் அரசியல் கைதிகளின் வழக்குகளில் முற்படும் சட்டத்தரணிகளிற்கும் புலி முத்திரையே குத்தப்படலாம் என சட்டத்தரணிகளும் கருதுவர்.
இவ்வாறான காரணங்களால் கைதிகளிற்காக முன்னிலையாக சட்டத்தரணிகள் பின்னடிப்பர் என்பதுடன் அரசியல் கைதிகளின் பாதுகாப்பும் ஓர் பாரிய கேள்விக்குறிக்குள்ளாகும் நிலமையே கானப்படுகின்றது.
அதாவது இக் கோமாகம்ப் பகுதிகள் அதிகம் பொதுபல சேனா போன்ற பல இணத்துவக் கட்சிகளின் பிரசன்னம் உள்ள பிரதேசங்கள் அதன் காரணமாகவும் பல இடையூறுகளிற்குச் சந்தர்ப்பம் உண்டு. இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளாது கைதிகளின் விடயத்தில் அசட்டையாக செயல்பட்டே இவ்வாறான மாற்றம் இடம்பெறுவதாகவே கருதவேண்டுயுள்ளது.
எனவே குறிப்பிட்ட விடயங்களைக் கருத்தில்க் கொண்டு இவ் 38 கைதிகளினதும் வழக்கு விடயத்தினை கோமாகம நீதிமன்றிற்கு மாற்றம் செய்வதனை சட்டமா அதிபர் மீள்பரிசீலணை செய்ய வேண்டும். அவ்வாறின்றி கோமாகம நீதிமன்றிற்கு மாற்றப்படுமானால் கூட்டமைப்பு ரீதியில் இது தொடர்பில் பாரிய அழுத்தம் கொடுப்பது தொடர்பில் விரைவில் ஓர் முடிவு எட்டப்படும். என்றார்.