தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருநங்கைகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், திருநங்கைகள் சொப்னா, கிரேஷ்பானு, செல்வி மனோஜ்பிரேம்குமார், வித்யா, செல்வம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  நாங்கள் முதுகலைப் பட்டப்படிப்புகளை முடித்துள்ளோம். திருநங்கைகளாக மாறிய நாங்கள், பல்வேறு இன்னல்கள், துயரங்களை அனுபவிக்கின்றோம். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்தவில், இந்த ஐகோர்ட்டின் உத்தரவின்படி நாங்கள் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டோம்.High Court

தமிழக சமூகநலத்துறை, திருநங்கைகள் நல வாரியம் அமைத்துக் கொடுத்திருந்தாலும், சிறப்பு அந்தஸ்து வழங்கி, திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு எதுவும் வழங்கவில்லை.  எனவே, அரசு பணிக்காக தமிழக அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் திருநங்கைகள் அல்லது சிறப்பு பிரிவினர் என்ற பிரிவின் கீழ் தேர்வு எழுத திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்றும் திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் தமிழக தலைமை செயலாளருக்கு கடந்த 2013-ம் ஆண்டு கோரிக்கை மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

திருநங்கைகளான எங்களுக்கு குடும்பத்தாரின் ஆதரவு இல்லை. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எங்களுக்கு சலுகைகள் வழங்கும்போது, திருநங்கைகள் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள். எனவே, நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.  இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘திருநங்கைகளின் அவல நிலையை மனுதாரர்கள் தங்களது மனுவில் விளக்கிக்கூறியுள்ளனர்.

கவுரவமாக வாழ்வதற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் அவர்கள் இடஒதுக்கீடு கேட்கின்றனர். எனவே, மனுதாரர்களின் கோரிக்கை மனுவின் அடிப்படையில், அனைத்து துறைகளின் கருத்துகளை கேட்டு, தமிழக சமூக நலத்துறை தகுந்த முடிவினை 6 மாதங்களுக்குள் எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Comments
Loading...