Designed by Iniyas LTD
தூத்துக்குடியில் நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடி கடல் பகுதியில் என்ஜின் கோளாறு காரணமாக தத்தளித்த 8 மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் இன்று மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் சந்தனம். இவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் அவரது மகன் மணிகண்டன் (26), அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (40), வினோத் (19), முருகானந்தம் (26), ஜோசப் (45), ஆனந்த் (30), கோபர்தன் (35), சக்திவேல் (36) ஆகிய 8 பேரும் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, படகில் இருந்த மீனவர்கள் சக மீனவர்களுக்கும், கடலோர பாதுகாப்பு அவரச அழைப்பு எண்ணுக்கும் (1093) தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தருவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தங்களது ரோந்துப் படகில் சென்று நடுக் கடலில் தத்தளித்த 8 மீனவர்களையும், அவர்கள் சென்ற நாட்டுப்படகையும் மீட்டனர். பின்னர், மீனவர்கள் திரேஸ்புரத்துக்கு அழைத்து வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.