Designed by Iniyas LTD
தென்பகுதி இனவாதத் தலைமைகளை தேசபக்தர்களாக இனங்காட்டுகிறது அரசு.- அனந்தி சசிதரன்
தென்பகுதி இனவாதத் தலைமைகளை தேசபக்தர்களாக இனங்காட்டி அவர்களின் இனவெறிக் கருத்துக்களை பாராட்டும் அரசு, வடக்கில் மனித உரிமைகள் பற்றி நியாயபூர்வமாக பேசி அதற்காக குரல் கொடுத்து வருவோரை பிரிவினைவாதிகளாக இனங்காட்ட முயல்வதை என்னவென்று சொல்வது? என அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வளிக்கத் திட்டமிடுவதாக செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அச்செய்தி தொடர்பாக அனந்தி சசிதரன் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு,
இலங்கை படைத்துறையினர் என்னை கைது செய்து புனர்வாழ்வு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந் நிலையில் இது குறித்து உள்நாட்டிலும் வெளி நாட்டிலுமுள்ள மனித நேய அமைப்புக்களும், ஆர்வலர்களும், புலம்பெயர் தமிழர்களும் என்னிடம் விசாரித்து வருகின்றனர்.
உண்மையில் எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் பெரும் நெருக்கடியை இலங்கை அரசு சந்திக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இவ்வாறான ஊடகப் பரப்புரைகள் மற்றும் அச்சுறுத்தல் மூலமூம் உண்மைக்கு புறம்பான குற்றச் சாட்டுகள் மூலமும் என்மீது அவதூறு கற்பிக்க முயல்வது அதன் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
கடந்த இருபத்தொரு வருடங்களாக அரச சேவையில் முகாமைத்துவ உதவியாளராக மூன்று மாவட்டங்களில் பணியாற்றிய என்னை பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டி புனர்வாழ்வளிக்க வேண்டுமெனக் கூறுவது அபத்தமான விடயமேயாகும்.
தென்பகுதி இனவாதத் தலைமைகளை தேசபக்தர்களாக இனங்காட்டி அவர்களின் இனவெறிக் கருத்துக்களை கைதட்டி பாராட்டும் அரசு, வடக்கில் மனித உரிமைகள் பற்றி நியாயபூர்வமாக பேசி அதற்காக மட்டுமே குரல் கொடுத்து வரும் என்போன்றவர்களை பிரிவினைவாதிகளாக இனம் காட்டமுயல்வதை என்னவென்று சொல்வது?
உண்மையில் சர்வதேச ரீதியில் பாரிய குற்றச்சாட்டுக்கும் விசாரணைகளுக்கும் முகங்கொடுக் வேண்டிய நிலையில் உள்ள இந்த அரசு, தனக்கு நெருக்கடியை கொடுத்து வரும் சர்வதேச சமூகத்தையும் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முள்ளிவாய்கால் போர் முடிவின் போது நான் எனது பிள்ளைகள் மற்றும் கணவருடன் அரச படையினரிடம் சரணடைந்த போது என்னையும் என் பிள்ளைகளையும் விட்டுவிட்டு என் கணவரை மட்டும் தடுத்து வைத்தது ஏன்? அப்போதே எமக்கு புனர்வாழ்வளித்திருக்கலாமே!
இன்று நான் ஒரு தனிமனுஷி அல்ல… எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி. அவர்கள் என்னை பிரிவினைவாதியாக பார்க்கவில்லை. தமது வாழ்வியல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு பெண்ணாகவே பார்க்கிறார்கள்.
சர்வதேச சமூகமும் என்னை அப்படித்தான் அங்கீகரித்து எனக்கு ஆத்ம பலத்தை தந்து எனது நியாயமான போராட்ட குரலுக்கு செவிசாய்த்து வருகிறது.
இந்த நிலையில் நான் பிரிவினைவாதியென்றால், என்னை தேர்தலில் நிறுத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், என்னை ஆதரித்து வாக்களித்த மக்கள், எனக்கு தமிழ்த்தேசியத்தை போதித்து நிற்கும் மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராசா ஐயா உட்பட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பிரிவினைவாதிகளாக அல்லவா இருக்க வேண்டும்.?
இனி இவர்கள் அனைவருக்கும் அல்லவா புனர்வாழ்வளிக்க வேண்டி வரும்?
ஒரு இனத்தின் நியாயமான மனித, அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வழங்கும் திராணியற்று அம் மக்களை ஆயுதமுனையில் ஒடுக்கி வைக்க நினைக்கும் பேரினவாதச் சிந்தனையாளருக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தம் அதனை மேலும் மேலும் தவறுகளையே செய்யத்தூண்டுகிறது என்பதையே இந்த புனர்வாழ்வு பற்றிய ஊடகச் செய்தி வெளிப்படுத்தி நிற்கிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.