தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் கூகிள் இணைய பலூன்!

1c2860b2-7558-41cc-b6af-e33371b851d4_S_secvpf.gifதெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் கூகுள் நிறுவனத்தின் பலூன்கள் வழியான இணையவசதி திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியது.

ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும். அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை இணைய வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். இந்த பலூன்கள் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட 2 மடங்கு அதிக உயரத்தில் பறக்கும்.

இலங்கையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டை சேர்ந்த மூத்த தொலைத் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட முதல் பலூனானது இன்று காலை இலங்கையின் வான்பரப்பை வந்தடைந்தது. இன்னும் இரண்டு பலூன்கள் விரைவில் இலங்கை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சேவையை சோதனை செய்ய கூகுள் அதிகாரிகள் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளனர்.

இந்த திட்டத்தை இலங்கையில் செயல்படுத்த அனுமதி அளித்ததற்காக இத்திட்டத்தின் 25 சதவீத பங்குகளை அந்நாட்டு அரசுக்கு கூகுள் வழங்கவுள்ளது.

Comments
Loading...