Designed by Iniyas LTD
படுகொலை செய்யப்பட்ட லசந்தவுடன் உரையாடியதை ஒத்துக்கொண்ட மகிந்த!
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு, பல்வேறு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளுங்களிலும் பதிவேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, லசந்த விக்கிரமதுங்கவுடன் தான் அடிக்கடி உரையாடி
யிருப்பதாகவும் வெளியாகியுள்ள உரையாடலில் சில உண்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், தான் பேசும் அனைத்தையும் ஒலிப்பதிவுசெய்து வைக்கும் பழக்கம் லசந்தவிடம் இருந்ததாகவும் தாம் அடிக்கடி லசந்தவுடன் உரையாடியமையினால் வெளியாகியுள்ள உரையாடலில் பேசியது நினைவில் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகியிருந்தமை குறிப்படத்தக்கது.