Designed by Iniyas LTD
பதியுதீன் நினைத்தால் வன்னியில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு – வடக்கு முதல்வர்
கத்தோலிக்க – முஸ்லீம் பிரச்சனை, தமிழர் – முஸ்லீம் பிரச்சனை, சிங்களவர் – முஸ்லீம் பிரச்சனை, சிங்களவர் – தமிழர் பிரச்சனை என்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் நினைத்தால் அவற்றை நீதியும் நியாயமுமான முறையில் தீர்த்து வைக்கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையில் சுகாதார தொழிலார்ளகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாண தமிழ் பேசும் மக்கள் இன வேறுபாடின்றி மனிதாபிமான அடிப்படையில் வாழ்ந்து வருபவர்கள் என உலகம் எம்மை போற்றும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என எண்ணுகின்றேன்.
அமைச்சர் ரிசாட்டும் அவரது இளைய சகோதரர் பாணியில் எம் எல்லோருக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக இருப்பார் என எண்ணுகின்றேன்.
கத்தோலிக்க முஸ்லீம் பிரச்சனை, தமிழர் – முஸ்லீம் பிரச்சனை, சிங்களவர் – முஸ்லீம் பிரச்சனை, சிங்களவர் – தமிழர் பிரச்சனை என்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பலவிதமான பிரச்சனைகள் எழுந்து வருவதை நாம் காண்கின்றோம்.
எமது மத்திய அரசின் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நினைத்தால் அவற்றை நீதியும் நியாயமுமான முறையில் தீர்த்து வைக்கலாம் என்பது எனது கருத்து.
அதற்கு காரணம் உலகத்தில் உள்ள பலம் வாய்ந்த 500 முஸ்லீம்களில் அவரையும் ஒருவராக தெரிவு செய்துள்ளனர். எனவே அவருடைய செல்வாக்கை அதிலிருந்து ஊகித்துக்கொள்ளலாம்.
இன்று இந்த தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் ஒன்று சேர்ந்ததுபோல் தொடர்ந்தும் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க அமைச்சர் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அடுத்த தேர்தலுக்காக எம்மில் பலர் வேலை செய்கின்றார்களே தவிர இந்த தேர்தலில் எமக்கு வாக்களித்தவாகளுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக எமது நடவடிக்கைகள் அமைகின்றதா என்பதில் சந்தேகமாகவே உள்ளது என தெரிவித்தார்.