Designed by Iniyas LTD
பரங்கிமலை இராணுவ பயிற்சி நிறைவு விழாவில் பிரணாப் முகர்ஜி
சென்னை பரங்கிமலையில் நடைபெறும் இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கலந்து கொள்கிறார். பரங்கிமலை ராணுவ மையத்தில் பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் தங்கள் பயிற்சியை இன்று நிறைவு செய்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மேலும் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்குகிறார். இதையடுத்து, பிற்பகலில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
பின்னர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு பிரணாப் முகர்ஜி டெல்லி புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.