தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பான் கீ மூனின் கருத்துக்களுக்கு சிறீ.அரசாங்கம் கடும் கண்டனம்

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் கருத்துக்களுக்கு அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலார் பிழையான புள்ளி விபரங்களுடன் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்கள் மீது 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்கள் மீது 150 தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள கருத்து முற்றிலும் பிழையானது எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.Ban Ki-moon (R) issues

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வாரங்கள் ஆகியுள்ளதாகவும் இந்தக் காலப்பகுதியில் ஒரு முஸ்லிமேனும், ஒரு கிறிஸ்தவரேனும் தாக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த போதிலும், எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் அமைதியான ஜனநாயகமான முறையில் குறித்த இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்ததாகவும், அதனை ஆளும் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சிறுபான்மை சமூகம் பற்றிய கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னதாக பான் கீ மூன் அவை சரியானதா அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

அச்சமின்றி அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே தேர்தல் அமைதியான நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவோ அல்லது சிறுபான்மை சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவோ பான் கீ மூன் கருத்து வெளியிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

Comments
Loading...