Designed by Iniyas LTD
மகிந்த ராஜபக்ச ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளார் – சிவிவி
தனக்கு வழங்கிய உறுதிமொழியை மீறிச் செயற்பட்டதன் மூலம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பதவிக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்தின் ஆளுனராக மீண்டும் முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமித்துள்ளதன் மூலம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளார்.
வடக்கு மக்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறிலங்கா அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட போது, சிவில் பின்புலம் கொண்ட ஆளுநர் ஒருவரை நியமிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.ஆனால் தற்போது அந்த உறுதிமொழியை மீறியதன் மூலம் சிறிலங்கா அதிபர் தனது பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறார்.வடக்கு,கிழக்கு மாகாணங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முழு நாட்டையுமே தமது அதிகாரத்தின் பிடியில் வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் அவர் செயற்பட்டு வருவதையே வடமாகாண ஆளுனரின் மீள் நியமனம் எடுத்துக் காட்டுகிறது.
அதிகாரத்தை பகிரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பதாக நான் காணவில்லை.மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ச வடக்கு மாகாணத்தில் தனது தேர்தல் தேவைகளுக்காகவே ஆளுநர் சந்திரசிறியை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.