Designed by Iniyas LTD
மீண்டும் தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!
அரசியல் கைதிகள் சிலருக்கு பிணை வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தாலும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் சரியான முடிவை அரசாங்கம் அறிவிக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய 31 அரசியல் கைதிகள் நேற்றையதினம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிப்பதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. நீதிமன்றம் பிணை வழங்கினாலும் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அரசாங்கம் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றக் கூடாது.
எனவே நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிப்பது தொடர்பில் அரசு உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என கைதிகள் குறிப்பிடுகின்றனர்.
விடுதலையை வலியுறுத்தி கடந்த 8ஆம் திகதி முதல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இம்முறை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாகவும், உறுதியான தீர்வை ஜனாதிபதி வழங்கும்வரை இது தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், கூட்டமைப்பு எம்பிக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் உடனடியாகக் கூடி ஆராயவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அரசியல் கைதிகள் முன்வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் கைதிகளை அநுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டிருந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பியிடமே கைதிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாது தம்மை ஏமாற்றிவிட்டதாகவும், தமது விடுதலைக்காக வடமாகாண முதலமைச்சர் தலைமையில் கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் உடனடியாகக் கூடி பேச்சுவார்த்தையொன்றை நட த்தவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்ததில் தமிழர்களுக்கும் பங்கு உண்டு. இரண்டு பிரதான கட்சிகளும் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளுக்காக கைதிகள் விவகாரத்தில் முரண்டு பிடிக்கக்கூடாது. கைதிகளை விடுவித்து அரசாங்கம் தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் பலர் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.