Designed by Iniyas LTD
மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ பன்னீர்செல்வம்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுடன், அவர்களது படகுகளையும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தமிழக சிறையில் உள்ள 30 இலங்கை மீனவர்களை விடுவிக்க அரசு முடிவெடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து 66 தமிழக மீனவர்களையும் அவர்களின் 81 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியதையும் பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல் மூலம், மீனவர்களை மட்டும் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார். படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முன்வராதது கவலை அளிக்கிறது என கூறியுள்ள முதலமைச்சர், அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.