Designed by Iniyas LTD
மைத்திரி அரசிற்கு சலாம் போடும் சம்மந்தன்
புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன் இந்த அரசு மனம் விட்டு பேச முன்வந்துள்ளமை மிகவும் முற்போக்கான செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-“புலம்பெயர் தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் எமது உறவுகள். அவர்களுக்கு இந்த நாட்டின் விவகாரங்களில் தலையிட உரிமையுண்டு; இந்த நாட்டுக்கு மீண்டும் வந்து வாழ உரிமையுண்டு. வெவ்வேறு காரணங்கள் நிமிர்த்தம் அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறினார்கள். சமாதானம், சமத்துவத்துடன் இந்த நாட்டில் வாழமுடியாத சூழ்நிலை அன்று இருந்ததால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும் இங்குள்ள தமிழ் மக்களுக்கு தம்மாலான உதவிகளை அன்றுதொட்டு வழங்கி வருகின்றார்கள். அத்துடன் நாட்டின் அபிவிருத்திற்கும் அவர்கள் பாரிய பங்களிப்பைச் செய்யக்கூடியவர்கள். இதனால் பலவிதமான நன்மைகள் எமது நாட்டுக்குக் கிடைக்கும். இதனை இந்த அரசு நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது. உள்நாட்டு தமிழர்களையோ, புலம்பெயர் தமிழர்களையோ எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது.
பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு தக்க சான்றுகள் இருக்கவேண்டும். ஆனால், கடந்த மஹிந்த அரசு சிங்கள வாக்குகளின் ஆதரவுடன் தமது ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்காகப் புலம்பெயர் தமிழர்களுக்குப் ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரையைக் குத்தியிருந்தது. தற்போது மைத்திரி அரசு இந்த முத்திரையை நாடாளுமன்றில் வைத்துக் கிழித்தெறிந்துள்ளது. அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் மைத்திரி அரசின் இந்தச் செயற்பாட்டை நாம் வரவேற்கின்றோம் என்று கூறியுள்ளார்.