Designed by Iniyas LTD
யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் இருதரப்புகளுக்கு இடையில் மோதல்
யாழ்ப்பாணம்- ஐந்து சந்தியில் நேற்றிரவு இருதரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் நாவந்துறை, ஐந்து சந்தியில் நேற்றுமுன்தினம் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், இரு தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் சுமார் 40 வரையிலான ஆட்களுடன் வந்து, ஐந்து சந்தியில் உள்ள முஸ்லிம் இளைஞரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய அந்த குழுவினர், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும், மிதிவண்டி ஒன்றிற்கும் தீ வைத்து எரியூட்டியுள்ளனர். அத்துடன் போத்தல்களை உடைத்து, அட்டகாசம் செய்த நிலையில், அங்கிருந்த இளைஞர்களும் பதிலுக்கு இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அவ்விடம் பெரும் போர்க்களமாக காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும், இராணுவத்தினர் அங்கு வந்து கலவரத்தை அடக்கியதுடன், நிலைமையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.