Designed by Iniyas LTD
யாழ், பல்கலைக்கழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணி
யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த பேரணி இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர். அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்ற நடைபவனி பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தினர். சுமார் அரைமணி நேரம் வீதியின் குறுக்கே நின்று போராட்டம் நடத்தியதால் பலாலி வீதி ஊடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
