Designed by Iniyas LTD
ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றனர்- சரத்பொன்சேகா
நாட்டின் இன்றைய சர்வாதிகார போக்குடனான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்லும் அதேவேளை ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இந்நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டு சென்றதாக கூறுவது வேடிக்கைக்குரிய விடயமாகும் என முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டினார். 
இவ்வரசினால் எங்களுடைய போராட்டங்களை தடை செய்ய முடியாது. நாங்கள் எதற்கும் அஞ்சியவர்களில்லை. அரசாங்கம் எங்கள் மீது எவ்வகையில் தடை விதித்தாலும் நாங்கள் அப்பாவி மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். அதேபோன்று எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பெருமளவிலான வாக்குகளை பெற்று வெற்றிகொண்டு நாட்டின் முன்னணி கட்சியாக பரிணமிப்போம் எனவும் அவர் கூறினார். அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இந்நாட்டை ஆட்சி செய்யும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியினால் ஊழல், மோசடி அதிகரித்துள்ளதுடன் கசினோ சூதாட்டத்தை .கொண்டுவந்து கலாசாரத்தை சீரழிவுக்குள் தள்ளியுள்ளது. அதேபோன்று சர்வாதிகார போக்குடன் இந்நாட்டை ஆட்சி செய்கிறது. இவ்வரசின் சர்வாதிகார போக்கிற்கு இடமளிக்கக் கூடாது.
இதேவேளை, தற்போது மக்களால் நிம்மதியாக வாழ்க்கையைகொண்டு செல்ல முடியாது. பல வருடங்களாக கொழும்பில் வாழும் மக்கள் சிறிய வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை அரசு வழங்காமல் அவர்களுடைய வீடுகளை உடைத்து அவ் இடங்களை அரசாங்கம் சுவிகரித்து வருகிறது.அத்துடன், இந்நாட்டு மக்கள் தொடர்பில் எவ்வித சிந்தனையும் அரசிற்கு கிடையாது.
கல்வி மற்றும் போக்குவரத்திற்கு போதியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இந்நிலையில் அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கி பொய்மை மிகு ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றியுள்ளது. தற்போது மக்களுக்கு மூவேளைகள் சாப்பிட முடியாது. ஒரு வேளை உணவையே மூவேளையும் உண்ணுகின்றனர். நமது மூதாதையர்களை விடவும் உணவு உட்கொள்ள வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். இவ்வரசு ஐந்து தலைமுறையினரை கடனாளியாக மாற்றியுள்ளது.
தற்போது அரசாங்கம் சர்வதேசத்தின் வல்லரசு நாடுகளுடன் நட்புறவை கொள்ளமால் சர்வாதிகார ஆட்சிகளையுடைய நாடுகளுடனே நட்புறவு கொள்கிறது. இதனால் தற்போது நாடு பெரும் வலைக்குள் சிக்கியுள்ளது. இதேவேளை, பிரதான எதிர்க்கட்சிகள் மீது குற்றங்களை சுமத்தாமல் அரச ஊடகங்கள் ஜனநாயக கட்சியின் மீதே குற்றங்களை சுமத்திவருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனுடைய மயிரிழைக்கு கூட இவ்வாட்சி யாளர்கள் தகுதியற்றவர்களென கூறியமைக்கு அரச ஊடகங்கள் என்னை தேசத்துரோகி என பெயர் சூட்டியுள்ளன. நான் மனச்சாட்சிக்கு உடன்படவே கூறுகிறேன்.
தற்போது தீவிரவாதிகள் அனைவரும் அமைச்சரவையிலேயே உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைமைப் பதவியை பயங்கரவாதிகளுக்கு வழங்கியது யார்? இவ்வரசாங்கமேயாகும். ஆகவே, இவ்வரசாங்கம் எங்களுக்கு எவ்வகையில் தடை விதித்தாலும் எங்களுடைய போராட்டங்களை நாம் நிறுத்தமாட்டோம். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி கட்சியாக பரிணமிப்போம் என்றார்.