Designed by Iniyas LTD
வித்தியா கொலை வழக்கு 12ம் திகதி தொடங்குகிறது!
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில், தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட்பார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு சட்டமா அதிபரால் குறித்த ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கை யாழ்.மேல் நீதிமன்றிலேயே நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அதற்காக பிரதம நீதியரசர் மூன்று தமிழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மூன்று தமிழ் நீதிபதிகளும் யாழ்.மேல் நீதிமன்றில் கூடவுள்ளனர். இதன்போது சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸ்ர் ஜெனரல் குமார்ரட்ணம் குற்றப் பகிர்வு பத்திரத்தை உத்தியோகபூர்வமாக நீதிமன்றில் தாக்கல் செய்வார்.
இதனை தொடர்ந்து குறித்த குற்றப்பகிர்வு பத்திரமானது சந்தேகநபர்களுக்கு அவர்களுக்கு விளங்கும் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டு அவ் குற்றப்பகிர்வு பத்திரமும் அதனூடான ஆவணங்களும் எதிரிகளுக்கு வழங்கப்படும். இதன்பின்னர் குறித்த வழக்கின் சாட்சிப் பதிவுகள் உள்ளிட்ட வழக்கு நடவடிக்கைகள் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படுவது தொடர்பான தகவல்கள் அன்றைய தினம் நீதிபதிகளால் தெரிவிக்கப்படும்.