Designed by Iniyas LTD
200 வருடங்களுக்கும் மேல் நாட்கூலிகளாக வாழும் மலையக மக்கள்!
மலையக மக்கள் இந்த நாட்டில் 200 வருடங்களுக்கு மேல் வாழும் சரித்திரம் கொண்ட சமூகமாக இருந்த போதிலும் இன்னும் நாட்கூலிகளாகவும் இன்னுமொரு சமூகத்தை அண்டி வாழ வேண்டிய அவலநிலை சமூகமாகவும் இருந்து வருகின்றோம். மலையக சமூகம் ஏனைய சமூகத்தைப்போல் உரிமை பெற்று சரிசமமாக வாழவேண்டுமானால் மலையக இளைஞர் யுவதிகள் மத்தியில் ஒரு சமூக உணர்வு ஏற்பட்டு ஒற்றுமையுடன் செயற்பட முன்வரவேண்டும். என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார். நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இளைஞர் யுவதிகளின் உணர்வுகளும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும்.
இன்று மலையக பெருந்தோட்டப் பகுதியில் சம்பள உயர்வுப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவருகின்றது. இந்த சம்பள உயர்வுப் பிரச்சினைக்கு பெருந்தோட்டப் பகுதியிலுள்ள இளைஞர்கள் எதிர்பார்க்கும் தீர்வை ஒரு அழுத்தமாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் வழங்க வேண்டும்.
மலையக இளைஞர்கள் வெறுமனே விளையாட்டிலும் கலை கலாசாரத்தில் மாத்திரமல்லாமல் ஒரு சமூகத்தின் தலைமுறையை உருவாக்கக்கூடியவர்களாகத் திகழ வேண்டும். வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் சமூக அபிவிருத்தியைவிட சமூக உரிமைக்காக போராடியதாலேயே சர்வதேச சமூகம் அந்த பிரதேசத்தை திரும்பிப்பார்க்கக்கூடியதாக இருந்தது.
அதேபோல் மலையகத்திலும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. தேவைகளும் இருக்கின்றன. மலையக சமுதாயம் 200 வருடங்களுக்கு மேல் வாழும் சரித்திரம் கொண்டிருந்தாலும் இன்றும் கூலிகளாகவும் இருந்து வருகின்றார்கள். இந்த சமூகம் விடுதலை பெற்று உரிமையுள்ள சமூகமாக வேண்டும். இந்த சமூகத்தின் குறைபாடுகள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இந்தச் சமூகம் முன்னேற வேண்டுமானால் மலையகத்திலுள்ள இளைஞர்கள் தன்னலம் கருதாது சமூக உணர்வோடு ஒன்றுபட்டு சமூக அபிவிருத்திக்காக செயற்பட வேண்டும். அவ்வாறு மலையக இளைஞர் யுவதிகள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு செயற்படும் பட்சத்தில் எமது மலையக சமுதாயம் எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களோடு சரிசமமாக வாழும் சூழ்நிலை ஏற்படும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை என கூறினார்.