Designed by Iniyas LTD
6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி, 2016- 2017ஆம் கல்வியாண்டில், 243 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 11ஆம் வகுப்பு பயிலும் 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர் என மொத்தம் 6,19,282 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 7 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கார்த்திக், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சந்திரசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.