Designed by Iniyas LTD
நல்லிணக்க அடிப்படையில் மக்களின் காணிகளை ஜனாதிபதி விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரச படைகள் நிலை கொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் விரைவில் நல்லிணக்க அடிப்படையில் விடுவித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சார்பாக அதன் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குருஸ் தலைமையில் அடையாள அமைதி போராட்டம் இன்று புதன் கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் நல்லாட்சி அரசிற்கு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி அரச படையினர் வசம் உள்ள காணிகளை ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் வருகின்ற 30 ஆம் திகதி யாழ்பாணம் வருகை தர உள்ள ஜனாதிபதி காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவான வாக்குறுதி ஒன்றை வழங்கி செல்ல வேண்டும் எனவும் , போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்ததுடன் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்கள் தொடர்பாக விடயங்கள் அடங்கிய ஆவண தொகுப்பு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கையளித்தனர்.

குறித்த மகஜரை பெற்று கொண்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன் றாஸ் மக்களின் கோரிக்கை நியாயமானது. எனவே இவ் மகஜர் மற்றும் மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் மாவட்ட செயலகம் சார்பாக காணி விடுவிப்பு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய விடையங்களை மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை , சிலாவத்துறை , முள்ளிக்குளம் கொண்டச்சிகுடா , உட்பட மக்களின் காணிகள் தற்போது வரை அரச படையினர் வசம் உள்ளதுடன் இக்காணிகளை விடுவிக்க கோரி பாதீக்கப்பட்ட மக்கள் பல வருடங்களாக போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
