Designed by Iniyas LTD
சுவிசில் இடம்பெற்ற புத்தாண்டும் புதுநிமிர்வும்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது 01.01.2015 வியாழக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரேற்றலுடன், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உயிர்களிற்கான பத்தாம் ஆண்டு நினைவாகவும், ஏனைய அனர்த்தங்களிலாலும் கொல்லப்பட்வர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
சுவிஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களோடு தாய்த்தமிழகத்திலிருந்து வருகை தந்த இசைக்கலைஞர்களுடன் பின்னணிப்பாடகர் பிரசன்னாவும் இணைந்து தாயக எழுச்சிப்பாடல்களை நிகழ்வின் ஆரம்பத்தில் பாடியமையானது மிகவும் உணர்வெழுச்சியுடன் அமைந்ததோடு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் புத்தாண்டு செய்தியுடன், உறுதி எடுத்து குவாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் தமிழீழ தேசமெங்கும் கடந்த சில தினங்களாக பெய்;து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அவசர நிதி உதவி கேட்கப்பட்டபோது சுவிஸ் தமிழர்கள் தமது கடமையறிந்து நிதி அன்பளிப்புக்களை வழங்கியமையானது அவர்கள் தமிழீழ வாழ் உறவுகள் மீது வைத்துள்ள பற்ருறுதியையும், பாசத்தையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.
இவ் மாபெரும் புத்தாண்டு நிகழ்வில் சுவிஸ், ஐரோப்பா வாழ் முன்னனிக் கலைஞர்களின் எழுச்சிப்பாடல்கள், திரையிசைப்பாடல்கள், எழுச்சிநடனங்கள், திரையிசை மற்றும் மேற்கத்தேய நடனங்கள், நகைச்சுவை நாடகம், குண்டக்க மண்டக்க போட்டி, இசைக்குறுவெட்டு வெளியீடு, சமகால கருத்துருவாக்கத்தைக் கொண்ட நாடகத்துடன் வேறுபல நிகழ்வுகள் மக்கள் மனதை கொள்ளை கொண்டதுடன், அவர்களின் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் மூலம் கலைஞர்களை ஊக்குவித்து மகிழ்ந்தனர்.
இவ் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த கலைஞ்ஞர்கள், வர்தகப் பெருந்தகைகள், ஊடக அனுசரணையாளர்கள் அனைவருக்கும் கௌரவப்பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் மண்ணின் மலரும் நினைவுகளுடனும், சங்கமித்த உறவுகளின் உற்சாகத்துடனும் இனிதே நிறைவுபெற்றன. இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனுசரணையாளர்கள், ஊடகங்கள், ஆதரவாளர்கள், இன உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் நன்றியுணர்வுடன் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துக்கொள்கின்றது.