Designed by Iniyas LTD
தமிழகத்தில் பாஜக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் – தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழகத்தில் பாஜக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார். தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கான நிலம் கையகப்படுத்தும் மசோதா தவறாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் சீராக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கருத்து. இதை காங்கிரஸ் கட்சியினர் அரசியலாக்குகின்றனர். தமிழகத்தில் எஞ்சியுள்ள ஓராண்டுக்கும் அதிமுக அரசு மக்களுக்கு நலன் பயக்கும் ஆட்சியை வழங்க வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சலுகை விலையில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், கர்ப்பிணிகள், குழந்தைகளின் நல வாழ்வுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றை பாராட்டவும், சட்டப்பேரவை சுதந்திரமாக செயல்பட வேண்டும், மக்களுக்கு நிம்மதியான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டவும் பாஜக தயங்காது. நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் அறிவியல் வளர்ச்சிக்கான திட்டம். இதில், சுற்றுச் சூழல் பாதிக்கும் வாய்ப்பு இல்லை. பெரியாறு அணை, காவிரி நதிநீர் பிரச்னை, பாலாறு பிரச்னை ஆகியவற்றில் தமிழகத்தின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.