Designed by Iniyas LTD
மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்க அனுமதிக்க மாட்டோம்!
மாடறுப்புத் தடையொன்று இலங்கையில் கொண்டுவரப்படலாம் என்ற செய்திகள், அண்மைய சில நாட்களாகப் பரவிவரும் நிலையில், அவ்வாறான தடையொன்றுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், முழுமையான எதிர்ப்பை வெளியிடுமென, அக்கட்சியின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.
பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ‘இலங்கையில் மாடறுக்கப்படுவதைத் தடை செய்யும் நடவடிக்கைகயை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்குமென்பதை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் என்ற வகையில் தெரிவிக்கிறேன்’ என்றார்.
மாடறுப்பதை, ‘முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமை’ எனக்குறிப்பிட்ட அவர், இது சம்பந்தமாக, கட்சியின் தலைவர் தலைமையில், கட்சியின் நாடாளுமன்றக் குழு, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்துக் கதைக்குமெனக் குறிப்பிட்டார்.
மாடறுப்புக்குத் தடை விதிக்கின்ற திட்டத்தை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவரும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்க்குமெனவும், அவ்வாறான விடயத்தை ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பதவி விலகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ ஹாபீஸின் இடத்துக்குப் பொருத்தமானவரை, கட்சியின் தலைவரே தீர்மானிப்பாரென, பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பிலான முடிவை, கட்சியின் தலைமை விரைவில் அறிவிக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தனியான யோசனையை முன்வைக்குமெனத் தெரிவித்தார். குறிப்பாக, அதிகாரப் பரவலாக்கலை மேலும் வலுப்படுத்துவதற்கான யோசனையாக அது அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.