Designed by Iniyas LTD
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் 18 பேர் தாயகம் திரும்புகின்றனர்!
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதி படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் பதினெட்டு இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலிருந்து எதிர்வரும் 28 ஆம் திகதி தாயகத்துக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை மூலம் மு.ப. 12.20 மணியளவில் ஸ்ரீலங்கா வந்தடைவர் என,ஸ்ரீலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இவரது முயற்சியால் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை விமான சேவை நிறுவனமும் அவர்களது பயணப்பொதியின் அளவை 40 கிலோ கிராமிலிருந்து 60 கிலோ கிராமிற்கு அதிகரித்துள்ளது.
இவ் அகதிகள் 18பேரில் 10 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தாயகத்தின் திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகியமாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர் என ஸ்ரீலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞான சோதி தெரிவித்தார்.
இவர்களுக்கு இலங்கையை வந் தடைவதற்கு இலவசமாக விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படும். அத்துடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்கடொலர்களும்,போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்கடொலர்களும், உணவு அல்லாத பணநன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுகின்றது என அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.