Designed by Iniyas LTD
யானை தாக்கி சிறுமி பலி! சோகத்தில் உறைந்த குடும்பம்
மட்டக்களப்பு, சித்தாண்டி, சந்தனமடு ஆற்றுப்பகுதியில்,நேற்று சனிக்கிழமை மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி 11 வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் சர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர், ஈரக்குளம் இலுக்குப்பொத்தாணை கிராமத்துக்கு சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பாதையூடாக மாவடிவேம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்காக வந்த காட்டு யானை, இவர்களை தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் சகோதரிகள் இருவரும் காயமடைந்த நிலையில். மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் சர்மிலா என்ற 11 வயதுடைய சிறுமி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார் என்று ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
சிறு காயங்களுக்குள்ளான அவரது தங்கை தொடர்ந்து மாவடிவேம்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த காலங்களில் இருந்து சித்தாண்டி, ஈரக்குளம் போன்ற பகுதிகளில் காட்டு யானையின் தாக்குதலினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம்தெரிவிக்கின்றனர்.
சந்தனமடு ஆறு ஊடான காட்டுப் பாதையின் இரு மருங்கிலும் இருக்கும் காடுகளை வெட்டி அகற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், குறித்த காட்டுப் பாதையில் இருக்கும் சிறிய வகை காடுகளை அகற்ற வன ஜீவராசிகள் அதிகாரிகள் முட்டுக்கட்டையாக தொடர்ந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளர்.