Designed by Iniyas LTD
ரவுடிகளுக்கிடையே துப்பாகிச்சண்டையில் நால்வர் பலி!
மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த அறுவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லபட்டதாகவும் அதில் நான்கு பேர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் பாதாள உலகக் கோஷ்டியினர் என, அறிய முடிகிறது. இவர்கள் அனைவரும் வானொன்றில் சென்று கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள இரண்டு பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.
இச்சம்பத்தை அடுத்து, அப்பகுதியில் பதற்ற நிலை நிலவியதுடன், மேலதிக பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் அழைக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பதற்ற நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மேலதிக நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் அறுவரினதும் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்த, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க, அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும் ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.