Designed by Iniyas LTD
சென்னை மாணவனுக்கு மோடி பாராட்டு!
போட்டியில் கிடைத்த பரிசுத்தொகையை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு அனுப்பிய சென்னை மாணவனுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் சன்னதி தெருவைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் – சங்கீதா தம்பதியின் மகன் ஷேஷாங் (வயது 10). ஆதம்பாக்கத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
அண்மையில் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்து ஆன்மிக கண்காட்சி நடந்தது. இதில் நடந்த சமஸ்கிருத போட்டியில் கலந்துகொண்ட மாணவன் ஷேஷாங்கிற்கு முதல் பரிசாக ரூ.1,000 கிடைத்தது.
பரிசுத்தொகையை பிரதமரின் கங்கை தூய்மை திட்டத்துக்கு அனுப்ப மாணவன் ஷேஷாங் முடிவு செய்தான். இதனையடுத்து தனக்கு கிடைத்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினான். அத்துடன் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினான்.
அதில், ‘இந்தியாவின் ஆன்மிக நதி கங்கை. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன். இயற்கையை ரசிப்பதால் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை நான் பயன்படுத்துவதில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தான்.
இந்த நிலையில் பிரதமர் மோடி அலுவலக செயலாளர் பி.கே.பாலி மாணவனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘உங்களது கடிதம் மற்றும் நிதி உதவி கிடைக்கப்பெற்றோம். உங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாணவன் ஷேஷாங் கூறுகையில், ‘எதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் எனக்கு பிடிக்கும். அந்த அடிப்படையில் தான் பரிசுத்தொகையை அனுப்பினேன். பிரதமர் பாராட்டு தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
மாணவனை பள்ளி நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் பலர் பாராட்டினர்.