தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது.
எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் பதினொரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.
இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், நடத்திய தாக்குதலாகும்.
இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.
இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் இலங்கை வான்படையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டனர்.
மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது..