Designed by Iniyas LTD
அரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு..
முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் இருந்தது இந்த ஆலாய வளாகத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த காலம் முதல் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வரை பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் தங்களால் வழிபடப்பட்டு வந்ததாகஅப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் பின்னர் மீள்குடியேறியபோது குறித்த ஆலய சூழலில் பாரிய இராணுவ முகாம் காணப்பட்டமையால் மக்கள் அச்சம் காரணமாக ஆலயத்துக்கு செல்லமுடியாது இருந்தனர்
இந் நிலையில் 2013 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மாருதானையை சேர்ந்த கொலம்ப மேதாலங்க தேரர் அவர்கள் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆலயத்துக்கு அருகில் இருந்த இராணுவத்தினரது உதவியோடு ஆக்கிரமித்து ஆலய வளாகத்தில் சிறிய கூடாரம் ஒன்றை நிர்மாணித்து அங்கு குடிகொண்டார்
அதன்பின்னர் குறித்த பகுதியை தொல்பொருள் பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் குறித்த பகுதியை சரியான பெயர்கூட இல்லாது செட்டிமலை என்ற பெயருடன் வர்த்தமானியில் வெளியிட்டு அப் பகுதியே செட்டிமலை என வாதிட்டு அந்த இடத்தில் விகாரைகளை நிர்மாணித்து வந்துள்ளார்
மக்களது எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்த இடத்தை அபிவிருத்தி செய்தவர் 2015 ஆட்சிமாற்றத்தின் பின்னர் பாரிய அளவில் எந்த ஒரு கட்டுமானப்பணிக்கும் இடமளிக்காது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மக்கள் மேற்கொண்டுவந்த நிலையில் ,
அண்மையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டவுடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு தற்போது அதனுடைய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது
இதனைவிடவும் ஆலயத்தின் அடையாளங்களை அழிக்கும் முகமாக நீராவியடி பிள்ளையார் ஆலயம் பழைய செம்மலை என தமிழ் மொழியில் எழுதப்படிருந்த பெயர்ப்பலகையை நீக்கி புதிதாக சிங்கள மொழியில் பெயர்ப்பலகையையும் நிறுவியுள்ளார்
குறிப்பாக இந்த செயற்ப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்ப்படுத்தினாலும் மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான இந்த செயற்ப்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இந்த செயற்பாடுகள் தொடருமிடத்தில் இனமுறுகலே ஏற்படும் எனவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

