தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிழை கண்டறிந்தால் ரூ.4.28 கோடி வரை பரிசு

உலகில் ஆன்லைன் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள், தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பிழைகளை கண்டறிபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது மென்பொருள்களில் பிழைகளை கண்டறிபவர்களுக்கு வழங்கும் தொகையை பக் பவுண்டி எனும் பெயரில் வழங்கி வருகின்றன.

மென்பொருள் பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 3.65 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை ஜூடி எனும் மால்வேர் பாதித்ததைத் தொடர்ந்து கூகுளின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு போன்று இலவசமாக கிடைக்கும் இயங்குதளங்கள் ஹேக்கர்களால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஜூடி சிறந்த உதாரணம் எனலாம்.

எனினும் புதிதாய் வெளியிடப்படும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதால், சமீபத்தில் கூகுள் பக் பவுண்டி திட்டத்தில் யாரும் பரிசு பெறவில்லை. இதனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை ஈர்க்கும் வகையில் பக் பவுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பரிசுத் தொகை 2,00,000 டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. .

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான பக் பவுண்டி திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூகுள் துவங்கியது. இத்திட்டத்தின் கீழ் பிழை கண்டறிபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்படும் பரிசுத் தொகை பொறியாளர்கள் கண்டறியும் பிழையை சார்ந்து நிர்ணயம் செய்யப்படும்.

Comments
Loading...