தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆவாரையின் நன்மைகள்

ஆவாரை பளிச்சிடும் தங்க மஞ்சள் நிறமான, கொத்தான பூக்களை உடைய தாவரம், மெல்லிய, தட்டையான காய்களை உடையது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பாக வளர்கின்றது. சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் இயற்கையாக ஆவாரை வளர்ந்திருக்கும். இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.  நீண்ட தூரம் நடப்போரே கவனியுங்கள் – ஆவாரை இலையை பருத்தி துணியில் பரப்பி, அந்தத் துணியை மடித்து தலைப் பாகையாக செய்து, தலையில் அந்தத் தலைப்பாகையை வைத்துக் கொண்டு நடக்க வெயிலின் வெப்பம் தோன்றாது. நடையும் வேகமாகும்.      aavarai

 மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும். இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக் கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை, காமம் பெருக்கும். குளிர்ச்சியுண்டாக்கும்.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர…

ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு,  கிராம் அளவு, 2 கிராம் வெண்ணையில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற…

ஆவாரம் பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்து வர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

பழங்காலத்திலிருந்தே, ஆவாரைக்கும் நீரிழிவை கட்டுப்படுத்தும் செயல்முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஆவாரையின் பரந்த உபயோகத்திலிருந்து தெளிவாகின்றது. இன்று, நீரிழிவு மருத்துவத்தில் பயன்படும் பல காப்புரிமை செய்யப்பட்ட இந்திய மருந்துகள் ஆவாரையிலிருந்து செய்யப்படுகின்றன. ரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைக்கும்.

ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சல், கோஷ்டம், மருதமரம் ஆகியவற்றின் உலர்ந்த தண்டுப் பட்டைகளை ஒரே அளவாக சேகரித்துக் கொண்டு, நன்கு தூள் செய்து கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி அளவு தூளை, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 8ல் ஒரு பங்காகக் காய்ச்சி குடிக்க வேண்டும். காலை, மாலை, இரண்டு வேளைகள் இவ்வாறு 2 வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வரலாம்.  ஆவாரம் பூக்கள் இருபதை பசைபோலச் செய்து, புளித்த மோரில் கலக்கிக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு செய்து வரலாம்.

Comments
Loading...