Designed by Iniyas LTD
சரத் பொன்சேகாவுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவாராம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக சற்று ஒதுக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா, மீண்டும் அரசாங்கத்துடன் நெருங்கி வரத் தொடங்கிய பின்னர் அம்பாந்தோட்டை மாவட்டத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் ஜனநாயக தேசிய முன்னணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான சரத் பொன்சேகா கடந்த வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களனி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, களனியின் பொதுமக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் சரத் பொன்சேகா தனது ஒத்துழைப்பை நாடினால், அவருக்கு அனைத்து வகையிலும் ஒத்தாசை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
களனித் தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து தான் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் மேர்வின் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.