Designed by Iniyas LTD
சவேந்திர சில்வா நியமனம் சர்வதேசத்திற்கு எகிரான போர்ப் பிரகடனம் – சிவாஜிலிங்கம் கோரிக்கை
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பில் இன்று ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும்போது இவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது, இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றச் சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத் தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் தமிழ் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்திற்கு எதிரான போர்ப் பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன. அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும் போர்க் குற்றச் சாட்டுக்களில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு மைத்திரி-ரணில் அரசு இராணுவத் தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.