தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்!

201607271425109585_Auto-driver-carrying-passengers-for-free_SECVPFமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் நிறைந்த அப்துல்கலாமுக்கு அனைவரும் இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலும் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணிகளை இலவசமாக சவாரி ஏற்றிச் செல்கிறார்.

இது தொடர்பான துண்டு பிரசுரத்தை தனது ஆட்டோவில் அவர் ஒட்டி இருக்கிறார். அதில் “நான் விட்டுச்சென்ற பணியை தொடருங்கள் மாணவ செல்வங்களே!!

– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

27.7.2016 இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் இலவசமாக பயணியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி ஆட்டோ டிரைவர் கலையரசனின் இலவச பயணிகள் சேவை அனைவரது பாராட்டையும் பெற்று உள்ளது. ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் அவரை பாராட்டி செல்கின்றனர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் கலையரசன் கூறியதாவது:-

‘அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் காலை முதல் இரவு 12 மணி வரை பயணிகளை இலவசமாக ஏற்றி செல்கிறேன்.

அப்துல்கலாம் பணம், புகழுக்கு ஆசைப்படாதவர். வயிற்று பிழைப்புக்காக வேலை தேடும் இந்த காலத்தில் வேலை கொடுக்கவே பணம் கொடுக்கும் நிலை உள்ளது.

அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரை முன் உதாரணமாக கொண்டு இதன் மூலம் அவருக்கு இதய அஞ்சலி செலுத்துகிறேன்.

காலை 6 மணியில் இருந்து இலவச பயணத்தை தொடங்கினேன். காலை 10 மணிக்குள் அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, கே.கே.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று விட்டேன்.

சவாரி வந்தவர்கள் இலவச பயணம் குறித்து கூறியும் அப்துல்கலாமை நினைவு கூர்ந்தும் என்னை பாராட்டினர். இது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு எனது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலையரசன் தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அப்துல் கலாம் மறைந்த போதும் இதே போல் பயணிகளை இலவசமாக ஏற்றிச்சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...