Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது: திலக் மாரப்பன தகவல்
இலங்கையில் தமிழ்க் கட்சிகள் வேண்டுகோள்விடுத்துள்ள போதிலும் அரசு தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்காது. கைதிகளின் வழக்குகள் ஆராயப்பட்டுக் குற்றமற்றவர்கள் யாராவது நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் விடுதலை செய்யப்படுவர் என்று சட்டஓழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கினால், இலங்கைப் படையினருக்கும் அவர்களது குற்றச் செயல்களை விசாரிக்காமல் பொதுமன்னிப்பளிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு அமைச்சர் திலக் மாரப்பன மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு என எதுவும் இல்லை. நாங்கள் ஓவ்வொரு வழக்காக ஆராய்வோம். யாராவது உரிய ஆதாரங்களோ அல்லது குற்றச்சாட்டோ இல்லாமல் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்வோம். எனினும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு நவம்பர் மாத நடுப்பகுதிக்கு முன்னர் தீர்வு காணப்படும். ஜெனிவா அறிக்கையில், விடுதலைப்புலிகள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்களும் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்தனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த அறிக்கை குறிப்பிட்ட காலத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டது. அதற்கு முற்பட்ட காலம் குறித்து என்ன கூறுவது. 1982-1983 முதல் விடுதலைப்புலிகள் பல குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர். அது இவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.