Designed by Iniyas LTD
தற்கொலை அங்கி தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிவந்த மேலும் 8 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக, ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணிய ஐவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான சந்தேகநபரின் அலைபேசிக்கு உள்வந்த மற்றும் அலைபேசியிலிருந்து வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள், ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.