Designed by Iniyas LTD
தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போன மற்றும் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் ஜனவரி 20ஆம் திகதியிலிருந்து சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க போவதாக வவுனியாவில் போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலைக்கும் வன்முறைக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து கானாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளும் ஏனைய சாட்சிகளும் இவ்விடயம் சார்ந்து செயற்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் இன்று வவுனியாவிலும் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பல காலமாக தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோதிலும் இதுவரை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கவில்லை என தெரிவித்தே இவ் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட செலயகத்திற்கு முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இவ் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.
எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா வீடு தீரும்புவார்களா?, மைத்திரி ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
நல்லாட்சி அரசாங்கம் தீர்வை பெற்றுதரும் என எதிர்பாரத்ததாகவும் எனினும் சிறுபான்மை இனம் என்பதால் தம்மை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.