Designed by Iniyas LTD
புதிய அரசினாலும் வடக்கு கிழக்கு மக்களுக்கு துன்பம்தான் : செல்வம் அடைக்கலநாதன்
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான முன்கூட்டிய நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கான நாடாளுமன்ற விவாதம் நேற்றும் இடம்பெற்றது. இதன்போது பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்படி, புதிய அரசாங்கத்திலும் வடக்கு கிழக்கு மக்கள் பல்வேறு துன்பங்களையும் வேதனைகளையும் சந்தித்துக்கொண்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களில் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
இதன் போது இவ்வாதத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாறசிங்க, இலங்கை தொடரூந்து சேவை கடந்த 20 வருடங்களாக எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என குறிப்பிட்டார்.
எனினும் இதனை மறுத்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்ன, யுத்தத்தில் சேதமடைந்த தொடரூந்து பாதையை, இந்திய நிதியுதவியுடன் புணரமைத்து, யாழ் தேவி தொடரூந்து சேவையை காங்கேசன் துறைவரை நீடித்ததாக குறிப்பிட்டார்.
சுங்க அதிகாரிகள் சிலர், தங்கள் கைப்பற்றும் பொருட்களுக்கான சன்மானத்தை காட்டிலும், கைப்பற்றாமல் இந்த பொருட்களை விடுவிப்பதற்காக மறைமுகமாக இலாபம் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டுள்ளனர் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டார். இவ்வாறு பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.