Designed by Iniyas LTD
போதைப்பொருள் கடத்தல் மன்னன் தப்பிப்போக சதி!
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கோடீஸ்வரரான “போதைப்பொருள்” கடத்தல் அரசன் மொஹமட் சித்தீக் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து வெளிநாடு செல்ல சூழ்ச்சித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக உளவுப் பிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வாராந்த சிங்களப் பத்திரிகையொன்றில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறைச்சாலைக்குள் குழப்பமொன்றை ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிப்பதற்கும் அதன் போது சித்தீக்கை பாதுகாப்புடன் கொண்டு செல்ல மோட்டார் வாகனமொன்றை தயார் செய்வதற்கும் ஏற்பாடாகியுள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பித்து செல்வதற்கான வாகனத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக சிறைச்சாலையின் முக்கிய அதிகாரிகள் நால்வருக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கான கடவுச்சீட்டும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மொஹமட் சித்தீக் இது போன்று போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இந்தியாவில் சிறைச்சாலையிலிருக்கையில் வைத்தியசாலைக்குச் செல்லும் போர்வையில் சென்னையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் அச்சிங்களப் பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.