Designed by Iniyas LTD
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன் – ஜெ
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியால் தான் மதுவிலக்கு நீக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன.
2007-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசியபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி, “கள்ளச் சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று. அறவே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாததற்குக் காரணம், மதுவிலக்குத் திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலே தான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியிலே வெற்றி பெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, உலகப் பண்பாடு, உலகக் கலாசாரம் சாட்சியாக இருக்கிறது’ என்றார்.
மதுவிலக்கு குறித்து இதுதான் கருணாநிதியின் உண்மையான கருத்து. ஆனால், என்னைப் பொருத்தவரையில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன். எனவே தான், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன், சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைத்ததுடன், 500 மதுபானக் கடைகளையும் மூடியுள்ளோம். இதன் மூலம், மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டிருப்பது அதிமுக அரசுதான் என்பது தெரியவரும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.