தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனைவியை தீமூட்டி கொலை செய்த கணவனுக்கு 10 வருட சிறை!

வடமராட்சி குடத்தனையில், மனைவியை தீமூட்டிக் கொலை செய்த கணவனுக்கு, 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று, (06) தீர்ப்பளித்தார்.

வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில், 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதியன்று, ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது 24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில், அப்பெண்ணின் கணவரான அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது 25) என்ற இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு மீதான விளக்கம் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (06) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தொகையைச் செலுத்தாத பட்சத்தில், மேலதிகமாக 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Comments
Loading...