Designed by Iniyas LTD
ராஜிதவுக்கு எதிராக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியர்கள்
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி இன்று (13) பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வாயிலுக்கு முன் இன்று பகல் 1 மணியளவில் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது சுகாதார அமைச்சர் றாஜித சேனாரத்னவுடைய குடியியல் உரிமை இல்லாதொழிக்கப்படவேண்டியது ஏன் என்ற துண்டுப்பிரசுரமும் வீதியில் செல்பவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ஒளடத அதிகாரத்தை மாபியாவிடத்தில் கையளிக்காதே, இலங்கை மருத்துவ சங்கத்திற்கு அரசியல் தலையீடு செய்யாதே, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.