Designed by Iniyas LTD
அதிபர் ஆணைக்குழுவுக்கு முடிவு கட்டுகிறார் மைத்திரி
ஊழல்கள், மோசடிகள், மற்றும் அதிகாரம், அரசாங்க வளங்கள் முன்னுரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோசமான செயற்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாததால் அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறு மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த மாதத்துடன், இந்த ஆணைக்குழுவின் சேவைக்காலம் முடிவடையும் நிலையில், சேவை நீடிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கவில்லை.
இதனால், இந்த ஆணைக்குழுவினால், முன்னெடுக்கப்பட்டு வந்த முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள், அரச அதிகாரம், வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்த விசாரணைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை ஆவணப்படுத்த ஆணைக்குழுவுக்கு 2 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.