Designed by Iniyas LTD
இடைத்தேர்தலில் தே.மு.தி.க.விற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்காது – திருமாவளவன்
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தே.மு.தி.க.வுக்கு ஆதரவு அளிக்காது என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணித்துள்ளது. இருப்பினும், தே.மு.தி.க. ஆதரவு கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னதாக கூறியிருந்தன.
ஆனால், ஆதரவை கேட்டுப் பெறக் கூடாது என்றும், தமிழகத்தில் மாற்றம் வர தே.மு.தி.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தே.மு.தி.க. மகளிரணி செயலாளர் பிரேமலதா கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் இன்று பேட்டி அளித்த திருமாவளவன், 3 தொகுதி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தே.மு.தி.க.வுக்கு ஆதரவு அளிக்காது என்று கூறினார்.
இந்த விஷயத்தில் வைகோவின் கருத்தே எங்கள் கருத்து என்று கூறிய திருமாவளவன், யாருக்கும் வலியச் சென்று ஆதரவளிக்கும் நிலையில் மக்கள் நல கூட்டணி இல்லை என்றார்.