Designed by Iniyas LTD
வைகாசி மாத நினைவு வணக்க நிகழ்வு
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறும் என்பதை அறியத்தந்திருந்தோம் அந்தவகையில் வைகாசி மாதமான இந்த மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும், தாயக விடுதலைப் போரின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்பேட் OX17 3NX என்னும் முகவரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மில்றன்கீன்ஸ் தமிழ் கல்விக்கழகத்தின் தலைவர் திரு. குலசேகரம் சுதர்சன் அவர்களும், ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த திரு. மயில்வாகனம் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி திரு. அன்சார் அவர்களும் ஏற்றினார். பொதுத் தூபிக்கான மலர்மாலை அணிவித்து மலர் வணக்கத்தை கப்டன் தமிழ்வாணன் அவர்களின் சகோதரன் திரு. வசந் அவர்கள் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் மாவீரர் நினைவுத்தூபிக்கான ஈகைச் சுடரினை 10/05/1988 அன்று வீரச்சாவடைந்த லெப். வெங்கடேஸ் மற்றும் இரு மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களும் ஏற்றி வைத்தனர். பின் மலர் மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த திரு. சத்தியரூபன் அவர்கள் அணிவித்தார். மக்களுக்கான நினைவுத்தூபிக்கு ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திருமதி ஜெசிந்தா அவர்களும், மலர் மாலையினை மில்றன்கீன்ஸ் தாயகம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த திரு. யாழி அவர்களும் நிகழ்த்த தொடர்ந்து மலர் வணக்கத்தினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. அமர்நாத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான நினைவுத் தூபிகளுக்கு அனைத்து மக்களும் ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கமும் அகவணக்கமும் செலுத்தினர்.
மேலும் மாவீரர் நினைவுப் பாடல்களை திரு. சுரேஷ், மைக்கல் ஆகியோர் பாடினர். தலைமையுரையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தைச் சேர்ந்த திரு. சங்கீதன் அவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தொடர்பான நினைவுரையினை புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் செயலாளரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான திரு. யோகலிங்கம் அவர்களும், மாவீரர்கள் தொடர்பான சிறப்புரையினை போராளி திரு. இன்பன் அவர்களும் நிகழ்த்தினர். இறுதியாக மாவீரர் நினைவுப் பாடலுடன் உறுதியுரை எடுத்து நிகழ்வுகள் நிறைவடைந்தது. அத்துடன் தாம்மால் ஆன பண உதவியினை மாதாந்தம் வங்கி ஊடாக வழங்குவதற்கான படிவங்களையும் மக்கள் நிரப்பிக் கொடுத்தனர்.















