தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக அறிவிக்க அல் ஹுசைன் வலியுறுத்தல்

unhrcவெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக அறிவிப்பதற்கும், வன்முறைகள் தூண்டப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கியிருக்கும் உறுதிமொழிகளை வரவேற்றிருக்கும் அவர், நம்பகமான சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு தற்போதைய இலங்கையின் நீதிக் கட்டமைப்பு பொருத்தமானதாக இல்லையென்பது துரதிஷ்டவசமானது. இதனாலேயே விசேட கலப்பு நீதிமன்றத்தை தமது விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்திருந்ததாக அல் ஹசைன் தெரிவித்தார்.

இலங்கை மீதான விசாரணை அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒளிப்படக் காட்சிமூலம் உரையாற்றியிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள்  பொறிமுறைகளுடனான  உறவுகளை புதிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கட்டாயமாக்கப்பட்ட விசாரணை பொறிமுறைகளை கடந்த அரசாங்கம் மறுத்ததுடன், விசாரணைக்குச் செல்பவர்களை அனுமதிக்கவும் மறுத்திருந்தது. இதனைவிட கவலைக்குரிய விடயம் என்னவெனில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான கெடுபிடிகளை அதிகரித்ததுடன், சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் பாதுகாப்பதற்கும் தவறியிருந்தமையாகும்.

இருந்தபோதும் புதிய அரசாங்கம் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லையென்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக எனது அலுவலகத்துடன் ஒத்துழைப்பாக செயற்பட்டது. அதேநேரம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டதின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளங்களை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரகசியமான தடுப்பு முகாம்கங்கள் செயற்பட்டதாகவும் அறிக்கைகள் கிடைத்துள்ளன. இவை தொடர்பில் உடனடியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உள்ளூர் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் தகவல்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 19 பேர் கைது செய்யப்படட்டுள்ளனர். 12 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு ள்ளனர். சித்திரவதைகள் தொடர்பில் 14 சம்பவங்கள் உள்ளன.இவ்வாறான நிலையில் பயங்கவராதத் தடைச்சட்டத்தை நீக்குவதை மீளாய்வுசெய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதை வரவேற்கிறேன்.

ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி சிறிசேனவும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பகிரங்கமாக அறிவித்திருந்தனர். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அலுவலகமொன்றையும் அரசாங்கம் அமைத்துள்ளது.

எமது கடந்த அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையை முன்னெடுப்பதில் ஏற்பட்ட தோல்விகள் குறித்துக் குறிப்பிட்டிருந்தோம். கடந்த காலங்களில் இரண்டு தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட மனித நேயத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் நாம் எமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். இருந்தபோதும் கடந்த ஜனவரி மாதம் முதல் எமக்கு உறுதிமொழி வழங்கியவற்றில் சில விடயங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது.

குறிப்பாக 2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 பொதுமக்களைக் கொலைசெய்த இராணுவ வீரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பிரதீப் எக்னலிகொடை காணாமல் போனமை தொடர்பில் இராணுவ வீரர் ஒருவரை கைது செய்திருப்பதாகப் பொலிஸார் அறிவித்திருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் முன்னேற்றமானதாகக் காணப்பட்டாலும் திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் 17 மனிதநேய அமைப்பு பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகள் இன்னமும் தொடர்ந்து வருகின்றன. இவையும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் என்றார்.

Comments
Loading...