Designed by Iniyas LTD
சீனப் பயணத்தை திடீரென ரத்துச் செய்தார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் குவான்சோ நகரில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, வரும் 21 ஆம் நாள் மகிந்த ராஜபக்ச சீனா செல்லவிருந்தார். அவர் வரும் 23 ஆம் நாள் வரை அங்கு தங்கியிருக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
குவான்டொங் மாகாண ஆளுனர் மா ஷிங்ரூயின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் இடம்பெறவிருந்தது.
அடுத்தமாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் பௌத்த மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச, இந்தியா செல்லவிருந்தார். இந்திய மத்திய அரசாங்கத்தின் பின்னணியுடனேயே இந்த நிகழ்வுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்சவுடன், புதுடெல்லி பேச்சுக்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சீன அரசாங்கம், குவான்டொங் ஆளுனர் மூலம், அழைப்பை அனுப்பியிருந்தது.
இதையடுத்து, இந்தியப் பயணத்துக்கு முன்னர், சீனப் பயணத்தை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
இது இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே, சீனப் பயணத்தை மகிந்த ராஜபக்ச திடீரென கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.