தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ட்ரக் விபத்தில் 19 அகதிகள் பலி!

லிபியாவின் பானி வாலிட் நகரில், அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ட்ரக் ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 19 பேர் பலியானதோடு, 78 பேர் காயமடைந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். எரித்திரியா, சோமாலியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த அகதிகளே, இந்த ட்ரக்கில் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பானி நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இவ்விபத்தின் போது, ட்ரக் குடைசாய்ந்தது எனவும், காயமடைந்த 78 பேரில் 8 பேர், படுகாயங்களுக்கு உள்ளாகினர் எனவும், வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், குறித்த ட்ரக்கின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்தனர். அவர் இறந்திருந்தாலோ அல்லது காயமடைந்திருந்தாலோ, அவர் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பார் என்ற அடிப்படையில், அவர் தப்பிவிட்டார் என்றே கருதுவதாக, வைத்தியசாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான ட்ரக்கில், சுமார் 250 அகதிகள் பயணித்தனர் எனக் கணிப்பிடும் அதிகாரிகள், அவர்களுள் சுமார் 50 பேர், அங்கிருந்து தப்பிவிட்டனர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

லிபியாவின் மத்தியதரைக் கடலோரத்திலிருந்து குடியேற்றவாசிகளைக் கடத்துவதற்கு, அங்கு அவர்களை அழைத்துச் செல்லும் பாதையே இதுவாகும். எனவே, அந்த அச்சத்தால் அவர்கள் தப்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Comments
Loading...