Designed by Iniyas LTD
தனி ஈழத்துக்கு போராடிய எமது மக்கள் காணிகளுக்கு போராடவேண்டியுள்ளது!
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியாமல் உள்ளமை அரசாங்கத்தின் மேலாதிகத்தையும் மெத்தனப் போக்கையும் தமிழர் தரப்பின் இராஜதந்திர பலவீனத்தையும் எடுத்துக் காட்டுகிறது என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாளாந்தம் மாற்றங்களை கண்டுவரும் இந்த நவீன உலகில் 60 வருடங்களாக மாற்றமடையாமல் இருக்கும் ஒரே விடயம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையாகத்தான் இருக்கமுடியும். கடந்த 60 வருடங்களில் பல ஜனநாயக போராட்டங்களையும், ஆயுத போராட்டங்களையும், இழப்புக்களையும் தியாகங்களையும், கடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்துநிற்கும் தமிழர்களின் கோரிக்கை பலவீனம் அடைந்து செல்வதினை அவதானிக்கமுடிகின்றது.
தனி ஈழம், சமஉரிமை ,தன்னாட்சி அதிகாரம் எனப் போராடிய தமிழ் மக்கள் தற்போது வீதி வீதியாக இறங்கி காணாமல் போனவர்களை மீட்பதற்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப் பெறுவதற்காகவும் போராடிவருகின்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்கள் குறைந்தபட்ச தீர்வினையாவது பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணத் துடன் இறுதியாக நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அனுதாபிகளாக தம்மை காட்டிக்கொண்டவர்களுக்கு ஏகோபித்த ஆதரவினை வழங்கியும் காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் நடத்திவந்த தமிழ் மக்களின் பெரும்பான்மையை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவினை புதிய அரசாங்கத்திற்கு வழங்கியும், பாராளுமன்றத்தில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தமிழ் தரப்புகள் அலங்கரித்தும், தமிழ் மக்களின் பல பிரதிநிதிகள் மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாமல் உள்ளமை பெரும்பான்மையின அரசாங்கத்தின் மேலாதிக்கத்தையும் மெத்தனப் போக்கையும், தமிழர் தரப்பின் இராஜதந்திர பலவீனத்தையுமே வெளிப்படுத்துகின்றது
நாட்டில் அதியுயர் பதவி வகிக்கும் ஜனாதிபதி அரசியல் கைதிகள்,காணாமல் போனோர் மற்றும் தமிழ் மக்களின் காணி தொடர்பில் மக்களுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அல்லது விரும்பாமல் இருப்பது புதிய அரசு தமிழ் மக்களின் எதிர் பார்ப்புக்களில் இருந்து தடம் மாறிசெல்கிறதா? என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றது.
காணாமல் போனோர் உள்ளிட்ட விடயங்களை விசாரிக்கவென அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவும் காணாமல் போனோர் தொடர்பில் தமிழர் தரப்பால் கூறப்படும் எண்ணிக்கையை குறைத்து காட்ட முனைவதுடன் பிரதமரும் அதை வலுப்படுத்தும் வகையில் சனல் 4 செய்தியாளருக்கு கருத்து கூறும்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது எனக் கருத்துப்படும்படியான பதிலை பதிவுசெய்துள்ளார்.
அதுமட்டுமன்றி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க பிரமுகர்கள் தமிழ் மக்களிடம் பேசும்போது ஒரு கருத்தையும் சிங்கள மக்களிடம் பேசும்போது வேறொரு கருத்தையும் சர்வதேசத்திடம் இரண்டிற்கும் மாறுபட்ட கருத்துக்களையும் பதிசெய்து வருகின்றனர். இவ்வாறான போக்கு குறுகிய காலத்துக்கு அனைவரையும் மகிழ்விக்கும் செயற்பாடாகவே அமையுமே தவிர நாட்டில் மாற்றத்தை கொண்டுவர போவதில்லை. தொடர்ந்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஆரம்பத்தில் இனப்பிரச்சனை தீர்வை கையில் எடுப்பதும் பின்னர் தென் இலங்கையில் சிறிய குளுக்காளால் காட்டப்படுகின்ற எதிர்ப்புக்களைக் காரணம்காட்டி கைவிடுவதுமான போக்கையே இந்த அரசாங்கமும் கையாளப் போகின்றது என்பதே தமிழ் மக்களின் அச்சமாக உள்ளது
இந்த நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சில் காட்டும் வேகத்தையும் முன்னைய அரசாங்கத்தின் ஜனாதிபதி உள்ளிட்ட தமக்கு எதிரானவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியேனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் காட்டியிருந்தால் ஓரளவேனும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும். இந்த அரசாங்கம் வெறும் பேச்சளவில் தமிழ் மக்களை மகிழ்விக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம் சர்வதேசத்திடமிருந்து தமக்கு கிடக்கும் நற்பெயரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் பயன்படுத்தி போர்குற்ற விசாரணைகளில் இருந்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் அழுத்தங்களில் இருந்தும் நாட்டையும் இராணுவத்தையும் காப்பாற்றும் நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருகின்றது .
இதனை புரிந்துகொள்ளாத அல்லது புரிந்தும் புரியாதது போல் நடந்துவரும் தமிழ் மக்களின் பிரதி நிதிகள் இப்போதுதான் காணாமல் போனவர்களின் விபரங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் கோருவதும் இதுதொடர்பாக நாங்கள் பாராளுமன்றில் பேசுகிறோம் என சமாதானப் படுத்துவதும் , தீர்வு பற்றி ஆராய வெளிநாடுகளுக்கு செல்லுவதுமாக தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் நிலையில் தமிழ் மக்கள் “ஆற்றாலும் கெட்டு குளத்தாலும் கெட்டு” செய்வதறியாது தவிர்த்து வருகின்றனர் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் சரியான முடிவுகளை எடுக்கத்தவறும் பட்சத்தில் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும் எனவே உடனடியாக தமிழர்கள் சார்ந்த அணைத்து அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து முடிவெடுக்க வேண்டுவதுடன் மக்கள் அரசியல் ரீதியில் விழிப்படையந்து ஜனநாயக் ரீதியிலான நீண்ட போராட்டங்களை நடாத்த முன்வர வேண்டும்.