Designed by Iniyas LTD
தமிழகத்தில் தினமும் 7 கொலைகளும் 70 கொள்ளைகளும் நடப்பதாக முதல்வர் ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்
தமிழகத்தில் தினமும் 7 கொலைகளும் 70 கொள்ளைகளும் நடப்பதாக முதல்வர் ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் மந்தமாகவும் பொறுப்பற்ற தன்மையுடனும் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
“சென்னை கேளம்பாக்கம் பகுதியிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்ற பெண் பொறியாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அதே பகுதியில் சர்மிளா என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
உமா மகேஸ்வரி காணாமல் போனதாக கடந்த 14ஆம் தேதியே கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புதரில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த பிறகே காவல்துறையினர் சென்று அந்த உடலைக் கைப்பற்றியுள்ளனர். காவல்துறையினர் எவ்வளவு மந்தமாக செயல்படுகின்றனர் என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது. காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையை நான் பல முறை சுட்டிக்காட்டியும் எந்த பயனுமில்லை.
மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் ஏற்கனவே ஓரிரு முறை நடந்துள்ளன. அதிலிருந்து காவல்துறையினர் பாடம் கற்று, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால், உமா மகேஸ்வரியின் கொலையை தவிர்த்திருக்கலாம்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 5,740 படுகொலைகளும், 58,731 கொள்ளைகளும் நடந்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது தமிழகத்தில் தினமும் 7 கொலைகளும், 70 கொள்ளைகளும் நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அச்சமளிக்கும் வகையில் பெருகிவிட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போடவும், அரசியல் பழிவாங்கலுக்கும் மட்டுமே காவல்துறையினரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சரிசெய்யும் பணியில் காவல்துறையை ஈடுபடுத்த வேண்டும்; இதன் மூலம் மக்கள் மனதில் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்கவேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.